சென்னையில் தொடங்கியது முதலீட்டாளர்கள் மாநாடு! 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசின் மாஸ் திட்டம் 1014366695


சென்னையில் தொடங்கியது முதலீட்டாளர்கள் மாநாடு! 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசின் மாஸ் திட்டம்


 

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின், அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அமீரகம் பயணம் மேற்கொண்டார்.

அப்போது உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வரின் அந்த பயணத்தில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தொழில் சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் உடன் தமிழக அரசு 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதோடு 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog